ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரியைக் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் தனியார் கல்குவாரி உள்ளது. புதுப்பட்டியைச் சேர்ந்த மாலதி(32) என்பவருக்குச் சொந்தமான லாரி குவாரிக்குள்ளேயே இயங்கி வந்தது. ஆடி அமாவாசை விடுமுறையை முன்னிட்டு லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு நேரத்தில் அந்த லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜிபிஎஸ் சிக்னல் மூலம் தெரிந்துள்ளது.
இது குறித்து லாரி உரிமையாளர் லாரி ஓட்டுநரிடம் கேட்ட போது அவர் தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
இதையடுத்து மாலதி ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் லாரியை கடத்திச் சென்றது புதுப்பட்டியைச் சேர்ந்த சின்னகுட்டி மகன் ராமகிருஷ்ணன்(38), மூக்காண்டி மகன் பாலமுகேஷ்(34), சேகர் மகன் மதன்(30) ஆகிய 3 பேர் என்பதும் லாரியை நாகர்கோவிலுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார் மூவரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.