சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளரை திடீரென மாற்றம் செய்யப்பட்டதற்கு சமுக அமைப்புகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 2017 இல் தொடங்கப்பட்ட நாள் முதல் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இயங்கி வந்தது. 6 பஸ்கள் மட்டுமே பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. பல ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் கூடுதலாக பஸ் வசதிகள் இய்க்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் தொடர்ந்து கூடுதல் பஸ் வசதிகள் செய்ய வேண்டுமென அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பணிமனையில் கிளை மேலாளராக பொன்ராஜ் என்பவர் பொறுப்பேற்ற 3 மாதத்தில் தீவிர முயற்சி காரணமாக பணிமனைகள் இருந்து கூடுதலாக 11 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுத்தார். இவருடைய சிறப்பான பணியினால் தற்பொழுது சாத்தான்குளம் பகுதியில் இருந்து பல கிராமங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளை மேலாளர் பொன்ராஜ் திடீரென கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஶ்ரீவைகுண்டம் பணிமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய பணியின் காரணமாக மகிழ்ச்சியடைந்த பொதுமக்களும், அனைத்து கட்சியினரும் மற்றும் வர்த்தக சங்கத்தினர் மேலாளர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவருடைய பணி மாற்றம் உத்தரவை ரத்து செய்து தொடர்ந்து சாத்தான்குளம் பணிமனையில் செயலாற்றிட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் வர்த்தகர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இதே பணிமனையில் 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒருவரை கிளை மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பணிமனையை முழுமையாக செயல்படவிடாமல் முடக்குவார் எனவும், இவர் இந்த பணிமனையை முன்னர் டயர் வைக்கும் குடோனாக மாற்றிட முயற்சி மேற்கொண்டதாக பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், பஸ்கள் கூடுதலாக இயக்கப்படாமல் குறைக்கப்படும் பட்சத்தில் இங்கு பணியாற்றும் பணியாளர்கள் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படலாம் என பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இவர் பொறுபேற்றவுடன் ஒரு பஸ்சை ஶ்ரீவைகுண்டம் பணிமனையில் நிறுத்தம் செய்ய பணிக்கப்பட்டுள்ளதாகவும் நாளடைவில் அந்த பஸ் சாத்தான்குளம் பணிமனையில் வேறு பணிமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு விடும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திமுகவுடன் பாஜக கூட்டணியா? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
ஆதலால் பணிமனை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு முன்னேற்றம் அடைய நல்ல திறமையான கிளை மேலாளரை நியமிக்க வேண்டும். அல்லது மேலாளர் பொன்ராஜை மீண்டும் நியமித்து பணிமனையில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என சாத்தான்குளம் பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.