விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அரசு பதிலால் அதிர்ச்சி

விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அரசு பதிலால் அதிர்ச்சி

 
விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், மலிவான விமானப் பயணங்கள் எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியாளர்கள் பேசிய காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகிழாக இருக்கிறது. 

இது குறித்த கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பி இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சதவீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
 
இதை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? கட்டணங்களை கட்டுப்படுத்த அரசிடம் ஏதாவது அதிகாரம் தக்க வைக்கப்பட்டுள்ளதா? அரசின் கைகளில் இருந்த ஒரே விமான நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம் இருந்த விலைக் கடிவாளம் கை நழுவிப் போய் விட்டதா? மலிவு விமானப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன்.
 
இதற்கு பதிலளித்துள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங், விமானக் கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதும் இல்லை. கட்டுப்படுத்துவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

1937 விமானங்கள் சட்டம் பிரிவு 135 உட்பிரிவு 1 இன் படி ஒவ்வொரு விமான நிறுவனமும் செலவினம், சேவையின் தன்மை, நியாயமான லாபம், நடப்பில் உள்ள கட்டண அமைப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆகவே நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கிற சுதந்திரம் விமான நிறுவனங்களுக்கு பிரிவு 135 உட்பிரிவு 1-ன் படி உண்டு, இருந்தாலும் அசாதாரண கோவிட் சூழலை கணக்கில் கொண்டு சட்டத்தின் பிரிவு 8 -ஐ பயன்படுத்தி அரசாணை எண் 02.20/ 21.05.2020 மூலம் உச்ச பட்ச, கீழ் வரம்பு கட்டணங்கள் தற்காலிகமாக வரைமுறை செய்யப்பட்டன.

இந்த விலை கட்டண அமைப்பு காலத்திற்கேற்ப, விமான எரிபொருள் விலை உயர்வுகளையும் கணக்கில் கொண்டு, மாற்றங்களுக்கும் ஆளாகியது. 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விலை உச்சவரம்பை இப்போதும் நிர்ணயித்து பயணிகளின் நலனை பாதுகாக்கிறோம். ஏர் இந்தியா ஜனவரி 2022 இல் தான் விற்கப்பட்டது. ஆனால் விலை உச்சவரம்பு மே 2020 இல் இருந்து அமலில் உள்ளது.

2016 இல் இருந்து உடான் (UDAN) திட்டம் மூலம் அதிக போக்கு வரத்து இல்லாத பிராந்திய விமான தளங்களின் இணைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

அரசுக்கு கடிவாளம் கைகளில் இல்லை என்பதே இந்த பதிலின் சாரம். 

மலிவு விலை விமானப் பயணங்கள் பொருளாதார சீர் திருத்தங்களின் வெற்றி என்று தம்பட்டம் அடித்த அரசாங்கம் இரண்டு மாதங்களில் 20 சதவீதம் உயர்வு, ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு ஏன் என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com