சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தால் நாங்கள் தெரிவிப்போம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெண்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. எனவே, அதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தால் நாங்கள் தெரிவிப்போம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வெளிநாட்டில் இருந்து வருவோரிடம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சருமத்தில் கொப்புளங்கள் தென்பட்டால், அந்த நபரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பன்னாட்டு விமான நிலையம் உள்ள மாவட்டங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனையிலும் 10 படுக்கைகளுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: யூடியூப்பில் விடியோ பார்த்து ஒயின் தயாரித்த சிறுவனுக்கு சிக்கல்
குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் துரிதமாக சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.