மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் உபநதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,500 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 25ஆம் தேதி இரவு மூடப்பட்ட 16 கண் பாலத்தின் மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பதினாறு கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் வெள்ளநீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் வெள்ள நீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காவிரிக் கரையோர மக்களுக்கு மேட்டூர் வருவாய் துறையினர் மேட்டூர் தாசில்தார் முத்துராஜா முன்னிலையில் தண்டோரா மூலம் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணையின் இடது கரையில் வெள்ள கட்டுப்பாட்டு வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுகளை எந்நேரமும் இயக்குவதற்கு சுழற்சி முறையில் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.