புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டு விழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி ஆலய வளாகத்தில் நங்காத்தூர் பங்குத் தந்தை அருட்திரு சதீஷ்குமார் தலைமையில் சிறப்பு பாடற்திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆண்டு விழா கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடிமரத்தில் ஆண்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று மாலை சிறிய தேர்பவனியும், வருகின்ற 19ஆம் தேதி ஆடம்பர பெரிய தேர்பவனியும் நடைபெற உள்ளது.
ஆண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.