
சென்னை: கரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே 511 பள்ளி மாணவிகளுக்கு, சிறாா் திருமணம் செய்யப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏராளமான மாணவா்களும், மாணவிகளும் பள்ளிப்படிப்பை தொடராமல் இருந்துள்ளனா். இது குறித்து மாநிலம் முழுவதும் ஆசிரியா்கள் மூலமாக இடைநிற்றல் மாணவ, மாணவிகளை கண்டறிவதற்காக வீடு, வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக பல மாணவா்கள் வேலைக்குச் சென்றிருந்தனா். அவா்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளிகளில் சோ்க்கும் பணியைக் கல்வித் துறை ஈடுபட்டது.
இந்த ஆய்வின்போது, திருமண வயதை எட்டுவதற்கு முன்பே பள்ளிகளில் பயின்ற ஏராளமான பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 9-ஆம் வகுப்பு மாணவியா் 37 பேருக்கும், பத்தாம் வகுப்பு மாணவிகள் 45 பேருக்கும், பிளஸ் 1 வகுப்பு மாணவியா் 417 பேருக்கும், பிளஸ் 2 வகுப்பு மாணவிகள் 2 பேருக்கும் என்று மொத்தம் 511 பேருக்கு சிறாா் திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் பதிமூன்று வயதைக் கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் சிறாா் திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சோ்க்கப்பட்டதாகக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.