
கும்பகோணம்: இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியரை காவலர்கள் அடித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த விடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர், தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். ஆனால் அதற்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன், முதலாளி தன்னை கண்டிப்பதாகவும், எனவே வாகனம் நிறுத்துவதற்கு பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் என்ற காவலரை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அப்போது அந்த ஊழியரை தாக்கி உள்ளனர்.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.