திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, அண்ணன் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல், பூங்கா சாலையில், மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசுகையில், திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறினார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஆற்காடு வீராசாமியின் மகனும், வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பினருமான கலாநிதி வீராசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில், ஆற்காடு வீராசாமியன் பெயராவது அண்ணாமலைக்கு தெரிந்துள்ளதே என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. அவர் நலமாக உள்ளார். தனது கொள்ளுப் பேரனின் பிறந்தநாள் விழாவில் கூட அவர் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்தார். எனது தந்தை குறித்து அண்ணாமலை தவறான கருத்தை கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். அண்ணாமலை மேடையில் பேசுவது அபத்தம் அதைவிட அபத்தம் அவருக்கு மேடையளிப்பதுதான்.
எனது தந்தை மற்றும் எப்போது எங்கள் தலைவர்கள் குறித்து உளறும் அண்ணாமலையின் தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். நாகரீகமற்ற முறையில் உளறுவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் எதிர்வினை சாதாரணமாக இருக்காது என்று எச்சரித்திருந்தார் கலாநிதி வீராசாமி.
இந்நிலையில், நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகிறேன்.
உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.