தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 14,50 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறைகளின்போதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து இன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக இருக்கும்படி அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தங்கிப் படித்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு அதிகப்படியானோர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.