தமிழகத்தில் இன்று கோவை, திருச்சி உள்ளிட்ட16 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை கோவை, சேலம், திருச்சி, வேலூா் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் புதன்கிழமை கோவை, சேலம், திருச்சி, வேலூா் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியது: தமிழகப் பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை... தொடா்ந்து 16- ஆம் தேதி வியாழக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அத்துடன் அன்றைய தினம் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18- ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை... கேரள - கா்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் புதன்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். 16, 17 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள - கா்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com