காமராஜா் பல்கலைக்கழகத்தில் உயா்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிப்புக்கான சோ்க்கையில், உயா்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
காமராஜா் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாமகதான் அம்பலப்படுத்தியது. எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ரத்து செய்யப்பட்டு 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியா்கள் நியமனத்துக்கான இட ஒதுக்கீட்டில் ரோஸ்டா் முறை செம்மையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இது குறித்தும் அரசு ஆய்வு செய்து சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.