அக்னிபத்: தமிழ்நாடு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
அக்னிபத்: தமிழ்நாடு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு


நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான அக்னிபத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் ரயில்கள் உள்ளிட்ட பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டன. இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால், ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகின்றன. 

இதையொட்டி, தமிழ்நாட்டிலும் சென்னை சென்ட்ரல், திருப்பூர், கோவை, மதுரை, சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கான உணவகம் மற்றும் ராணுவம் சார்ந்த பிற இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளை தமிழ்நாடு காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் கும்பகோனம் பகுதிகளில் லேசான போராட்டங்கள் தென்பட்டன.

ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். வடமாநிலங்களைப்போல இந்த இளைஞர்கள் ரயில் நிலையங்களில் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தலாம் என உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து முக்கிய ரயில் நிலைய வளாகங்களிலும் வன்முறைத் தடுப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அக்னிபத் விவகாரம் குறைந்த அளவிலேயே தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. திருப்பூரைத் தவிர மற்ற பகுதிகளில் போராட்டங்கள் தென்படவில்லை. திருப்பூரிலும்கூட போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு எவ்வித சேதத்தையும் உண்டாக்காது முழக்கங்களை எழுப்பி திரும்பிச் சென்றனர்.

இருந்தபோதிலும், தமிழ்நாடு முழுவதும் வன்முறை பரவலாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து உளவுத் துறை எச்சரிக்கை வந்துள்ளதால், பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com