இலங்கைக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியது தமிழகம்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணப் பொருள்களை தமிழக அரசு அனுப்பியிருக்கிறது.
இலங்கைக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியது தமிழகம்
Updated on
2 min read


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணப் பொருள்களை தமிழக அரசு அனுப்பியிருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனிடையே இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில் இனியும் தாமதிப்பது நன்றாக இருக்காது என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிபுரிந்திடும் வகையில்
1. ரூபாய் 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி,
2. ரூபாய் 28 கோடி மதிப்பிலான உயிர்காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள்,
3. ரூபாய் 15 கோடி மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர், ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பிவைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்கவேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக முதல்வரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29.04.2022 அன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டபடி இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அனுப்பிவைக்கும் பணியினை சீரிய முறையில் செய்து முடித்திட அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு அரசு மருந்துப் பொருட்கள் நிறுவனம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பிவைக்கும் நிகழ்வு முதற்கட்டமாக 18.05.2022 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. ரூ.30 கோடி மதிப்பிலான 9045 மெட்ரிக் டன் அரிசி, ரூ.1.5 கோடி மதிப்பிலான 50 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ.1.44 கோடி மதிப்பிலான 8 டன் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலங்கை நாட்டிற்கு சரக்குக் கப்பலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரி தொகுப்பு இலங்கை துணைத்தூதர் முனைவர் வெங்கடேசுவரன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று (22.06.2022) இரண்டாம் கட்டமாக காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பலின் மூலமாக ரூ. 48.30 மதிப்பிலான 14712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 11.90 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செஞ்சி. கே. எஸ். மஸ்தான், அர. சக்ரபாணி, பெ. கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக முதல்வர் சார்பில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com