சென்னை: அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து அளித்திருந்த கடிதம் அவைத் தலைவரிடம் வழங்கப்பட, அதற்கு அவைத் தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.
சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழு என்று முழங்கியவாறு, ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கமும் கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.
இதையும் படிக்க.. முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?
முன்னதாக, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும், இரட்டைத் தலைமை வேண்டாம் என்று வலியுறுத்தி, பொதுக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்தார். இதையடுத்து, ஒற்றைத் தலைமை என்ற பொதுக் குழு உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்த தமிழ் மகன் உசேன், அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி கூடும் என்று அறிவித்தார்.
இதையும் படிக்க.. ஜூலை 11இல் மீண்டும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம்
இவை அனைத்தும் ஓ. பன்னீர்செல்வம் மேடையில் இருக்கும் போதே, அவரைத் தனிமைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று வைத்திலிங்கம் கோஷமிட்டார். ஆனால், அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் அவரது குரல் எழுப்பியது வெளியே வரவில்லை. இதையடுத்து, வைத்திலிங்கம் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் மேடையிலிருந்து கீழே இறங்கி, பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அப்போது, கூட்டத்தினரைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்தைக் காட்டி கையசைத்தார்.