அதிமுக பதவிச் சண்டை... மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
அதிமுக பதவிச் சண்டை... மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?


தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் கூடியது. 

பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக தீா்மானங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் 23 தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அனைத்து தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறினாா். அதற்கு கூட்டத்தினா் பலத்த கரகோஷத்துடன் ஆதரவு தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன், ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினா்களும் வைத்தனா். மேலும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் இப்போதே அறிவிக்க வேண்டும் என்று கோரினா். அதன்படி ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் இதேபோல சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா். அப்போது அதிமுக உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.

இதனால், அதிருப்தியுற்ற ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவாளா்களும் பொதுக்குழுவிலிருந்து வெளியேறினா். அப்படி வெளியேறும்போது, வைத்திலிங்கம் மேடையில் இருந்த ஒலிபெருக்கியில், ‘இந்தப் பொதுக்குழு சட்டப்படி நடைபெறவில்லை. அதிமுக அழிவுப் பாதைக்குத்தான் செல்கிறது’ என்று கூறிவிட்டு படிகளில் இருந்து இறங்கினாா். 

இதனைத்தொடர்ந்து பொதுக்குழவின் அனைத்து நிகழ்ச்சிகளும் 12.05 மணியளவில் முடிவுற்றது.

இதனிடையே,  “பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக அழைப்பின் பேரில் தில்லி செல்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், தில்லியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்குரைஞர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். 

இதுதொடர்பாக,  ஓபிஎஸ் தரப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், மோடியுடனான சந்திப்பின்போது அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து முறையிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் நாடியுள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதராவளர்களுடன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன், தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com