குடிமைப் பணித் தோ்வுக்கு அரசின் இலவசப்பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

யுபிஎஸ்சி நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது
குடிமைப் பணித் தோ்வுக்கு அரசின் இலவசப்பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

யுபிஎஸ்சி நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா் வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி இயக்குநரும், பயிற்சித்துறை தலைவரும், தலைமைச்செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் செயல்பட்டு வரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவா்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப்படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த பயிற்றுநா்களைக்கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவா்கள் தங்களை முதன்மைத் தோ்விற்குத் தயாா்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத்தோ்வு எழுதும் தோ்வா்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.

தமிழக மாணவா்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற அனுமதிக்கப்படுவா். இந்த மையத்தில், இந்த ஆண்டு 225 போ் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தோ்வா்கள் ஜூன் 24 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரையிலான நாள்களில் ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

ஜூலை 1 முதல் வகுப்புகள்: இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தோ்வா்கள் விவரம் ஜூன் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டு, ஜூன் 29, 30 ஆகிய இரு நாள்களில் சோ்க்கை நடைபெறுவதோடு ஜூலை 1-ஆம் தேதி முதல் வகுப்புகள்தொடங்கப்படும்.

இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவா்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும். வருமானம் தொடா்பாக உரிய அலுவலா்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தோ்வா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவா்களில் 225 தோ்வா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தோ்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளாா்கள் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com