'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 
'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Published on
Updated on
1 min read

'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் தானியங்கி அறுவைச் சிகிச்சை மையத்தை அமைச்சர் இன்று பார்வையிட்டார். பின்னர் சென்னை ஆவடியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார மையத்திற்கு அமைச்சர் மாண்டவியா காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தேசிய சுகாதார இயக்கத்தின் செயல்பாடு குறித்து மாநில மேலாண் இயக்குநர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள், மத்திய-மாநில சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார். 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு அரசு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ததாகவும், இந்த அரசு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பமான மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான, 2 அறுவை சிகிச்சை கன்சோல்களைக் கொண்ட ஒரே மையமாக இது செயல்படுகிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ள 11 கோடியே 26 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களில் 94% முதல் டோஸ், 82% இரண்டாவது டோஸ். இது பாராட்டப்பட வேண்டிய சாதனை. 

பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் 'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார். அதன்மூலம், டயாலிசிஸ் தேவை ஏற்படும் நோயாளி, நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் அந்த வசதியைப் பெற முடியும். குஜராத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு டயாலிசிஸ் தேவைப்பட்டால், தமிழகத்திலோ அல்லது நாட்டின் எந்த ஒரு பகுதியிலோ அவர் சுலபமாக அதனைப் பெற முடியும். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரத்திற்காக தமிழகத்திற்கு சுமார் ரூ. 2600 கோடியையும், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் சுகாதார உள்கட்டமைப்பிற்காக ரூ. 404 கோடியையும் மோடி அரசு ஒதுக்கியுள்ளது. 

சுகாதார இயக்கங்களில் பணிபுரியும் அனைத்து கரோனா போராளிகளுக்கும், குறிப்பாக பெண்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com