நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.  
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி


நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 
 
வேலூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா புதன்கிழமை  நடைபெற்றது.

இன்று முதல் ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி  பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

வேலூரில் பாலாறு பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது,  நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். அப்போதுதான் அவைகளை பாதுகாக்க முடியும்.

வேலூரில் பாலாறு பெருவிழாவில் பங்கேற்றுள்ள சந்நியாசிகளை பார்த்து வணங்கும் ஆளுநர் ஆர்.என். ரவி.

2016 இல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார், ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

2025-க்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2021 செப்டம்பர் மாதத்திலே அடைந்துவிட்டோம். இந்தியா 2030-க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள் அதுதான் சனாதனம். பூமி ஒரு ஆதாரமாக பார்க்கக் கூடாது, அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்குள் சிறிய  தீவுகள் நேரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்னை ஏற்படுகிறது.

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழாவில் பங்கேற்றுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள்.

என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம்.

சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளம், குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல.

ஓவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செய்யல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள், 2047 ஏரியில் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆளுநர் ரவி பேசினார்.

இவ்விழாவில்,அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தின் தலைவர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், துணைத்தலைவர் சாமி ராமாநந்தா, பொதுச்செயலாளர் ஆத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com