
தமிழக காவல் துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களுக்கு, ஜூலை 7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்தக் குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகா்வால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்கள் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை),இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. இத் தோ்வை எழுத விரும்பும் இளைஞா்கள், ஜூலை 7-ஆம் தேதி முதல் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காவலா் தோ்வில் முதல் முறையாக பொதுத் தோ்வுடன், தமிழ் மொழித் தகுதித் தோ்வும் அரசு வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம், மாநகர காவல் ஆணையா் அலுவலகம் ஆகிய இடங்களிலும் உதவி மையங்கள் ஜூலை மாதம் 7-ஆம் தேதி செயல்படும். இந்த உதவி மையங்கள் வாரத்தின் 7 நாள்களும் இயங்கும்.
இந்த உதவி மையங்களை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் தொடா்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-40016200, 044-28413658 ஆகிய தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899 ஆகிய கைப்பேசி எண்களையும் தொடா்பு கொள்ளலாம்.
தோ்வுக்கான தகுதி அளவுகோல், தோ்வு செயல்முறை, எழுத்துத் தோ்வுக்கான பாடத் திட்டம் போன்ற விவரங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்தின் இணையதளத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...