சென்னை: தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவை கோர சென்னை வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ, மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து தனது விமரிசனத்தை முன் வைத்தார்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹ இன்று சென்னை வந்தார். தோ்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்க வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவா் கேட்டுக் கொண்டார்.
அண்ணா அறிவாயலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் யஷ்வந்த் சின்ஹ சந்தித்துப் பேசினார். அறிவாலயத்துக்கு வந்த யஷ்வந்த் சின்ஹவுக்கு, முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையும் படிக்க.. திமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்ஹ
எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹவுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, தவாக, கொமதேக, மமக உள்ளிட்டக் கட்சிகள் தங்களது ஆதரவை அளித்துள்ளன.
நிறைவாக பேசிய யஷ்வந்த் சின்ஹ, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்ட சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மகாராஷ்டிரத்தில் சிவசேனை ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ தலைமையிலான அரசை பாஜக ஆதரிக்கிறது. மகாராஷ்டிரத்தில் புதிதாக பதவியேற்கும் ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்பதால் பாஜகவைச் சேர்ந்தவர்கள் முதல்வராக பதவியேற்கவில்லை.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை தமிழக ஆளுநர் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளால் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது நபர் நான் என்கிறது ஊடகங்கள். 10வது நபராகத் தேர்வு செய்திருந்தாலும் நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டிருப்பேன் என்றார் யஷ்வந்த் சின்ஹ.