சேலம்: சேலம் மாநகராட்சி மேயராக ஆ.ராமச்சந்திரன் (77) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆ.ராமச்சந்திரன் மேயராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்து தேர்தலை நடத்தினார். மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராமச்சந்திரனுக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
இதன் பிறகு திமுக வார்டு உறுப்பினர்கள் மேயர் ஆ.ராமச்சந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் மாநகராட்சியில் ஐந்தாவது மேயராக ஆ.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேலம் நகராட்சி 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சியை அடுத்த ஐந்தாவது பெரிய மாநகராட்சி சேலம் மாநகராட்சியாகும். முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சூடாமணி பொறுப்பேற்று இருந்தார்.
2001 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த மேயராக சுரேஷ்குமார் பொறுப்பேற்றார். இதன் பிறகு 2006ம் ஆண்டு மேயராக திமுகவை சேர்ந்த ரேகா பிரியதர்சினி பொறுப்பேற்றார். பிறகு 2011ம் ஆண்டு அதிமுக வை சேர்ந்த சவுண்டப்பன் மேயரானார்.
பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. தற்போது தேர்தல் நடந்துள்ளது. இப்போது ஐந்தாவது மேயராக ஆ.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது . திமுக கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தை கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். மேயர் தேர்தலில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
தேர்வு பெற்ற ஆ.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மேயராக தேர்வு பெற்றதற்கு மகிழ்ச்சி. திமுக தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி சாக்கடை வசதி போன்றவை நிறைவேற்றித்தர பாடுபடுவேன்' என்றார்.