உக்ரைனில் இருந்து இதுவரை 500 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்று வரும் மெகா கரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் இன்று (05.03.2022) 50,000ற்கும் மேற்பட்ட இடங்களில் 23வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 22 மெகா தடுப்பூசி முகாம்களில் 3,72,41,003 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று (04.03.2022) மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 (10,00,30,346) கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல்வர் தடுப்பூசி செலுத்துவதை ஒரு பேரியக்கமாக நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதின் விளைவாக இந்த 10 கோடி என்ற இலக்கினை அடைய முடிந்தது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 91.54 % முதல் தவணை தடுப்பூசியும், 72.62% இரண்டாம் தவணை தடுப்பூசியும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் 83.9% முதல் தவணை தடுப்பூசியும், 47.17% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதில் இதுவரை 6,37,264 நபர்களுக்கு அதாவது 76.57% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் மேயர் பதவிக்கு என பல்வேறு சிறப்பு மிக்க மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் மேயர் அவர்களை வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்த மரபினை கடந்த ஆட்சி காலத்தில் மேயர் என மாற்றி அரசானை வெளியிடப்பட்டது.
தற்சமயம், மேயரை மீண்டும் வணக்கத்திற்குரிய மேயர் என அழைப்பது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் என தெரிவித்தார். தொடர்ந்து, போர் சூழல் நிலவி வரும் உக்ரைன் நாட்டில் படித்து வரும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களை மீட்பதற்காக முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு மீட்புக் குழுவினையும், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களைக் கொண்ட குழுவினையும் அமைத்துள்ளார். மேலும், மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளனர். அங்கு தமிழகத்தை சார்ந்த சுமார் 2,200 மாணவர்கள் பயின்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.