மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பயன்பாட்டிற்காக வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்திலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக 109 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குடும்பத்தில் உள்ள மாணவர்களின் கல்வி இடைநிற்றலைக் கருத்திற் கொண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மற்றும் பட்டயப் படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி, கரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டது. அக்குழந்தைகளுக்கு மெய்நிகர் வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசால் கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் நேரடி வகுப்புகளால் பயனடைவதில் மிகுந்த சிரமம் இருந்தது. அக்குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிப்படையாமல் இருக்கும் வகையில், பள்ளிக் கல்வி கற்கும் குழந்தைகள், தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பாகும் கல்வித் தொலைக்காட்சியை பார்த்து முழுவதும் பயனடையும் பொருட்டும், பள்ளிகள் திறந்தவுடன் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்திட ஏதுவாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மறுவாழ்வு முகாம்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 55 இன்ச் அல்லது 43 இன்ச் ஸ்மார்ட் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவிட ரோட்டரி இண்டர்நேஷனல் சங்கத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு, 43 இலட்சத்து 60 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பீட்டிலான 109 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக ரோட்டரி இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்கியுள்ளது. இத்தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒவ்வொரு மறுவாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு மாலை நேரக் கல்வி மைய அறைகளில் நிறுவப்படும்.