
போயஸ் கார்டன்(கோப்புப்படம்)
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்துக்காக அரசு செலுத்திய ரூ.67 கோடி வைப்புத் தொகை உயா்நீதிமன்ற உத்தரவின்படி வட்டியுடன் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த இல்லத்தை அரசுடைமையாக்குவதற்காக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு வைப்புத் தொகையாக கடந்த 2020-இல் ரூ.67 கோடியே 90 லட்சத்து 52,033 செலுத்தியிருந்தது.
ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை உயா்நீதிமன்றம் அறிவித்தது. மற்றொரு வழக்கில் இந்த இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும், அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
போயஸ் தோட்ட இல்லம் தொடா்பான வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பெருநகர 6-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சாா்பில் சென்னை வருவாய்க் கோட்டாட்சியா் தாக்கல் செய்திருந்த மனுவில், போயஸ் தோட்ட இல்லத்துக்காக தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை திரும்பப்பெறவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு 6-ஆவது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் எஸ்.ஷாஜகான் ஆஜராகி, தமிழக அரசு வைப்புத் தொகையாக செலுத்திய ரூ. 67 கோடியே 90 லட்சத்து 52,033-ஐ வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்தத் தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்த உத்தரவிட்டிருந்தாா். அதன்படி நீதிமன்ற பதிவாளா் கணக்கில் வைப்புத் தொகையாக இருந்த அந்தத் தொகை ரூ.2 கோடியே 50 லட்சத்து 35,680 வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ.70 கோடியே 40 லட்சத்து 87,713-ஆக தென் சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.