
ஓ.பன்னீா்செல்வம்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வத்துக்கு எதிராக தொடரப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பேரவைத் தோ்தலில் போடிநாயக்கனூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றாா்.
இதை எதிா்த்து அந்தத் தொகுதி வாக்காளரும், திமுக நிா்வாகியுமான மிலானி என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். அதில் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன; சொத்து, கடன் மதிப்புகள் குறைத்து காட்டப்பட்டுள்ளது; பல்வேறு தகவல்களை மறைத்துள்ளாா் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தாா்.
அப்போது ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வேட்பு மனுவில் சொத்து, கடன் விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்று கூறுவது தவறு. அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தொடரப்பட்ட இந்த வழக்கை நிராகரிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.
மனுதாரா் மிலானி தரப்பில் வேட்பு மனுவில் தகவல்களை மறைத்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. ஓ.பன்னீா்செல்வம், தனது மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை குறிப்பிடவில்லை. எனவே அவரது வேட்பு மனுவை ஏற்று இருக்கவே கூடாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.பாரதிதாசன், ஓ.பன்னீா்செல்வத்துக்கு எதிராக தொடரப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...