பட்ஜெட்: தமிழகத்தின் நிதிநிலை எப்படி உள்ளது?

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்: தமிழகத்தின் பொருளாதார நிலை, வருவாய் நிலை எப்படி உள்ளது?
பட்ஜெட்: தமிழகத்தின் பொருளாதார நிலை, வருவாய் நிலை எப்படி உள்ளது?


தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் வருவாய் நிலை குறித்த தெரிவித்திருப்பதாவது,

நான் இதுவரை இந்த அரசின் புதுமுயற்சிகளையும் திட்டங்களையும் எடுத்துரைத்துள்ளேன். தற்போது ஒட்டுமொத்த நிதிநிலைமையை விளக்க விழைகிறேன்.

பெருந்தொற்றின் மூன்றாம் அலையாலும் வரலாறு காணாத வெள்ளத்தினாலும் நிதி நெருக்கடியைச் சந்தித்த போதிலும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது.

இதனால், மானியச் செலவினங்கள் உயர்ந்துள்ளன. இருப்பினும், சிறந்த நிதி நிருவாகத்தின் வாயிலாக இதர செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதன் பயனாக, 202122 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளான 2,61,188.57 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது, திருத்த மதிப்பீடுகளில் 2,59,150.97 கோடி ரூபாய் என மொத்த வருவாய் செலவினங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

166) பெருந்தொற்றின் பாதிப்பாலும், வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்ட இடையூறுகளாலும் மாநிலத்தின் சொந்த வரிவருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே, வணிக வரிகள், மாநில ஆயத்தீர்வை, வாகன வரி ஆகியவை வரவு செலவுத் திட்ட இலக்குகளைக் காட்டிலும் திருத்த மதிப்பீடுகளில் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடான 1,26,644.15 கோடி ரூபாயை ஒப்பிடும்போது, திருத்த மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,21,857.55 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது.

மத்திய அரசின் வரி வசூல் உயர்ந்துள்ளதாலும், மாநில அரசிற்கு வழங்கப்பட வேண்டிய கடந்த ஆண்டுகளின் நிலுவைத் தொகையை வழங்கியதாலும், மத்திய வரிகளின் பங்கீடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடான 27,148.31 கோடி ரூபாயை ஒப்பிடும்போது, திருத்த மதிப்பீடுகளில் 33,580.22 கோடி ரூபாய் மத்திய வரிகளின் பங்கீடாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள், வரவுசெலவு மதிப்பீடான 34,564.42 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது திருத்த மதிப்பீடுகளில் 36,609.47 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இந்த ஆண்டு வரப்பெற்றதால், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதாரக் சூழலால், மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் வசூலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. வரவுசெலவுத் திட்ட மதிப்பீடான 14,139.01 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது, திருத்த மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 11,830.93 கோடி ரூபாயாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மொத்த வருவாய் வரவினங்களின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடான 2,02,495.89 கோடி  ரூபாயுடன் ஒப்பிடும் போது, திருத்த மதிப்பீடுகளில் 2,03,878.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த அரசின் சிறப்பான நிதி நிருவாகத்தால், வரவுசெலவுத் திட்டத்தில் கணக்கிடப்பட்ட 58,692.68 கோடி ரூபாய்க்கு மாறாக, திருத்த மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை 55,272.79 கோடி ரூபாயாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தாலும், பெருந்தொற்றின் மூன்றாம் அலையைக் கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளாலும் மூலதனப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் 42,180.97 கோடி ரூபாயாக உள்ள மூலதனச் செலவினம் திருத்த மதிப்பீடுகளில் 37,936.23 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22ஆம் ஆண்டில், மாநிலங்களுக்கு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.5 சதவீதம் வரை நிதிப் பற்றாக்குறையை அனுமதித்து பதினைந்தாவது மத்திய நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.33 சதவீதம் என முன்னர் மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் 3.80 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2022-23ஆம் ஆண்டின் வரவுசெலவு திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, கூடுதல் வருவாயை ஈட்டிட அரசு எடுத்து வரும் முயற்சிகள், மேம்பட்ட வரி வசூல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் இனங்கள் பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளன.

வணிக வரிகள் : 1,06,765.22 கோடி ரூபாய்
மாநில ஆயத்தீர்வைகள் : 10,589.12 கோடி ரூபாய்
முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் : 16,322.73 கோடி ரூபாய்
மோட்டார் வாகனங்கள் மீதான வரி : 7,149.25 கோடி ரூபாய்

 எனவே, வரவு செலவுத் திட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,42,799.93 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 15,537.24 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com