ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றும், இன்றும் காலை - மாலை என்று ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளித்து பதிலளித்துள்ளதாகவும் கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 22) ஆஜரானார்.
அவர்களுடைய விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையான உரிய பதிலை அளித்துள்ளேன். முரணான பதிலை நான் அளிக்கவில்லை.
நேற்றும், இன்றும் காலை - மாலை என்று, ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளித்து பதிலளித்துள்ளேன்.
ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக பரவிய தகவல் பொய்யானது. 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு 6 முறை எனக்கு கடிதம் கிடைத்தது.
ஒரு முறை பட்ஜெட் இருந்ததாலும், ஒரு முறை சொந்த காரணத்தாலும் என்னால் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை. ஆணையத்தில் தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால், உண்மையை ஆணையம் தான் கண்டறியும் என்று கூறினார்.
பேட்டியின்போது, சசிகலா குறித்த கேள்விக்கு, சசிகலாவை 'சின்னம்மா' என்று குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் மீது எனக்கு சந்தேகமில்லை. தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்று குறிப்பிட்டார்.