சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவிப்புகளை வெளியிட்டு நிறைவேற்றாத திட்டங்களையும், திமுக நடைமுறைப்படுத்திய திட்டங்களையும் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.
சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் போது நிறைவேற்றாத திட்டங்களையும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் புள்ளிவிவரத்துடன் பட்டியலிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் உரையில், இது எனது அரசல்ல, நமது அரசு. அதிமுக ஆட்சியில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன என்று கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்களை பட்டியலிட்ட அவர், சென்னை - குமரி இடையேயான சாலை திட்டம், வீடில்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
ரூ.92,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. ரூ.9,740 கோடி மதிப்புள்ள 20 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.
அம்மா வங்கி அட்டை போன்ற அறிவிப்புகளும் நடைமுறைக்கு வரவில்லை. ரூ.5,469 கோடி மதிப்பிலான 26 திட்டங்கள் கைவிடப்பட்டன. ரேசன் கார்டுகளுக்கு செல்லிடப்பேசி, இலவச வைஃபை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதே வேளையில், திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் இதுவரை 208 அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ரூ.4,000 நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
ஆனால், திமுக ஆட்சியைப் பார்த்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுகவினர் கூறுவது, பத்து மாதக் குழந்தையிடம் வந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கேட்பது போல உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.