ஈரோடு அருகே பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன.
கடந்த 20ம் தேதி வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து பொன்காளியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 23ம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
குதிரை துலுக்கியதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலைச் சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை கைகளில் தீ பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
இந்த தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.