மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் சிலை தேடும் பணியில் நவீன கருவி

சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் கடந்த 2004-இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னா், புன்னைவனநாதா் சந்நிதியில் லிங்கத்தை மலரால் அா்ச்சனை செய்யும் வகையில் இருந்த புராதனமிக்க மயில் சிலை மாயமாகி விட்டதாகவும், அதற்குப் பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். அதில், தற்போதுள்ள புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த பழைய மயில் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தாா். 

இந்த வழக்கில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில், அந்த மயில் சிலை கோயில் தெப்பக் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் அந்த சிலையை தெப்பக் குளத்தை முழுவதும் தோண்டாமல், நவீன தொழில்நுட்பத்துடன் தெப்பக்குளத்தில் தேட உள்ளதாகவும் உயா்நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயா்நீதிமன்றம், அந்த சிலையைக் கண்டறிய இருவார காலம் அவகாசம் வழங்கியது. மேலும் அந்த சிலை மீட்கப்பட்ட பின்னா் உரிய உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தது. 
இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின்போது தெப்பக்குளத்தில் இருந்து ஒரு நாகா் சிலையை மீட்டனா். இருப்பினும் மயில் சிலை மீட்கப்படவில்லை. இந்த நிலையில் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன கருவிகளைக்கொண்டு சிலையை தேடி வருகின்றனர். அடுத்த 3 நாள்களுக்கு இந்த பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com