வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் நேரில் சந்தித்து அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டுக் கொண்டதோடு, அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் அளித்த புகாரின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனல பலரையும் பாதிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன.
இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளும், கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.
இந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக இன்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்துப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.