கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்காமல் நிறுத்தி வைத்தால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5; பத்தாம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைஅந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.
இந்நிலையில், சில தனியாா் பள்ளிகளில், கல்விக் கட்டண நிலுவை காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாதவாறு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைப்பதாக புகாா்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில்,
கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க பள்ளிகள் மறுக்கக்கூடாது. நுழைவுச் சீட்டு வழங்க மறுத்தால், சமந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.