இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வழங்கினார்.
அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. தமிழக அரசு சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதிமுக, திமுக கட்சிகள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வழங்கினார்.
உடன் எம்எல்ஏக்கள் செல்வபெருந்தகை, ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஸ் குமார், எஸ் விஜயதாரணி உள்ளிட்டோர் இருந்தனர்.