
மறைந்த தனது தந்தையின் அரசுப் பணியை வழங்கக் கோரி விண்ணப்பித்த மகளுக்கு, அவரது கணவா் அரசுப் பணியில் இருந்தபோதும் திருமணத்துக்கு முன் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, அந்தப் பணியை அவருக்கு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம், கருங்குழி பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் தண்டபாணி. இவா் கடந்த 2000-ஆம் ஆண்டு உயிரிழந்ததையடுத்து, அவரது மகள் சுந்தரி, தனது சகோதரிகளின் அனுமதியைப் பெற்று, கருணை அடிப்படையில் வேலை கேட்டு 2001-ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்தாா். இந்த மனு பல ஆண்டுகளுக்குப் பின்னா், 2015-ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சுந்தரி தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஸ் பிறப்பித்த உத்தரவு: கருணை அடிப்படையில் வேலை கேட்டு மனுதாரா் விண்ணப்பித்தபோது அவருக்கு திருமணம் ஆகவில்லை. தற்போது திருமணம் ஆனதை சுட்டிக்காட்டி, அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது. மனுதாரரின் சகோதரிகளின் கணவா்கள் அரசு வேலையில் உள்ளனா் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. எனவே, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப 4 வாரங்களுக்குள் பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.