அரசு வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்களின் பதிவெண் பலகையில் G அல்லது அ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்போது தமிழகமெங்கும்
பதிவெண் பலகையில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது அந்த எழுத்துக்களின் வில்லைகள் ஒட்டப்பட்டோ மோட்டாா் வாகன சட்டத்துக்குப் புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு மோட்டாா் வாகன சட்டம் 3 உட்பிரிவு (ஓ) -இன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது.
எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே G அல்லது அ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே, தமிழக அரசு வாகனங்களைத் தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவோா் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.