அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி ரூ. 3 கோடி மோசடி செய்ததாக, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்துவின் தம்பியும், முன்னாள் வெம்பக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகியுமான விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நவ. 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை டிச. 17-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படலாம் என்பதால் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார்.
இதையடுத்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகத்தில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவுச் செயலர் பாண்டியராஜன் (35), ராஜேந்திர பாலாஜியின் உறவினர் கணேசன் ஆகியோரையும் தனிப் படை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரைவில் விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க | சர்வதேச செவிலியர்கள் நாள்: ராகுல் காந்தி வாழ்த்து