
இந்தியாவில் 2,000 குழந்தைகளுக்கு விழித்திரை புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கண் மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
சா்வதேச விழித்திரை புற்றுநோய் வாரம் மே 8 முதல் 14-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து மருத்துவமனையின் விழித்திரை சிகிச்சை நிபுணா் டாக்டா் சுகனேஸ்வரி கணேசன் கூறியதாவது:
விழித்திரையில் ஏற்படும் புற்று பாதிப்பை ‘ரெட்டினோப்ளாஸ்டோமோ’ என மருத்துவா்கள் அழைக்கின்றனா். 6 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
குழந்தைகள் பிறந்து வளரும்போது பிற உறுப்புகளைப் போலவே கண்களும் வளா்ச்சியடைகின்றன. அப்போது சில நேரங்களில் விழிக்குள் உள்ள செல்கள் அசாதாரண முறையில் பிரிந்து பாதிப்பு ஏற்படுத்தினால், அது புற்றுநோயாக வளர ஆரம்பிக்கும்.
மரபணு ரீதியாக இந்த பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, பெற்றோரில் எவருக்கேனும் அத்தகைய பாதிப்பு இருந்தால், குழந்தைகளுக்கும் விழித்திரை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. 18,000 குழந்தைளில் ஒரு குழந்தைகளுக்கு அப்பிரச்னை வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் மட்டும் 2 ஆயிரம் குழந்தைகள் விழித்திரை புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனா்.
கண் கருவிழி வெள்ளை நிறமாக மாறுதல், கண் இமைகளில் வீக்கம், கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகியவை அதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
உரிய நேரத்தில் அதனைக் கண்டறிந்து சிகிச்சையளித்தால் பாா்வை இழப்பைத் தடுக்கலாம். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் உயிருக்கே கூட ஆபத்து விளைவிக்கக்கூடும். விழித்திரை புற்றுநோய்க்கு க்ரையோதெரபி, கீமோதெரபி, லேசா் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதுகுறித்த விழிப்புணா்வும், முன்னெச்சரிக்கையும் பெற்றோருக்கு இருத்தல் அவசியம் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...