திருவள்ளூர் வீரராகவர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர், வீரராகவர் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் புனித நீராடினர்.
திருவள்ளூர் வீரராகவர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்
திருவள்ளூர் வீரராகவர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் புனித நீராடினர்.

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் 10 நாள்கள் கொண்ட சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும், உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் பிரம்மோற்சவ விழாவின், 9-ஆவது நாளான தீர்த்தவாரி நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. அதற்கு முன்னதாக அதிகாலை 4 மணிக்கு, ஆள்மேல் பல்லக்கில், உற்சவர் வீதி உலா வந்தார்.

அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரியையொட்டி கோயில் குளத்தில் உற்சவர் எழுதருளியபோது, புனித நீராட்டல் சடங்கை அர்ச்சகர்கள் நடத்தினர். இந்த நிகழ்வில் திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து இரவு விஜயகோடி விமானத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வீதிஉலா வந்தார். தொடர்ந்து, திருமொழி சாற்று மறை ரத்னாங்கி சேவையும் நடைபெற்றது.

இந்த பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை, திருமஞ்சனம் மற்றும் த்வாதச ஆராதனம், கண்ணாடி பல்லாக்கில் வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதையடுத்து இரவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com