ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதிகாரிகளின் நெருக்கடியால் மிகுந்த மன வேதனையில் உள்ளதாகவும் பணியாளர் குற்றச்சாட்டியுள்ளனர்.
தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும், 108 வைணவ தலங்களில் மிக முக்கியத் தலமாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஆண்டாள் கோயில், சக்கரத்தாழ்வார் சன்னதி, பெரியாழ்வார் சன்னதி ,கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக செயல் அலுவலர் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெரு பகுதியில் வசித்து வரும் ஆண்டாள் கோயிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கர்ணன் என்பவரை செயல் அலுவலர் மற்றும் ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருவதாகவும், இதனால் எனக்கு ஏற்கனவே உடல் குறைபாடுள்ள தனக்கு மிகுந்த மன உளச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், உடல் ரீதியான பிரச்னைகள் செயல் அலுவலரிடம் தெரிவித்தும் வேண்டுமென்றே இரவு பணி வழங்கப்படுவதாகவும், இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அதிகாரிகள் பணியாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்து இதுபோன்ற செயல்களை வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும், நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் .
இந்தசூழ்நிலையில், கோயில் கணக்கர் சுப்பையா என்பவர் சக பணியாளர்கள் இருக்கும்போதே பணியாளர் ஒருவரை எட்டி உதைக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
பணியாளர்கள் முன்னிலையில் அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் போது, செயல் அலுவலர் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.