சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தொடங்கும் தேதியை மாற்றியமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா 3 ஆவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் கல்வி, ஆன்லைன் தேர்வுகள் என இருந்த நிலையில், தற்போது நேரடி வகுப்புக்களும், நேரடியாக தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 10,11,12 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்பட்டு வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மற்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பல கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதியை மாற்றியமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த தேர்வுகள், ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.