12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - தேனி ரயில் சேவை: மக்கள் மகிழ்ச்சி (விடியோ)

மதுரை -தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை, மதுரை சந்திப்பில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை துவங்கியது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சந்திப்பில் இருந்து இன்று புறப்பட்ட மதுரை - தேனி பயணிகள் ரயில்
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சந்திப்பில் இருந்து இன்று புறப்பட்ட மதுரை - தேனி பயணிகள் ரயில்

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை, மதுரை சந்திப்பில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை துவங்கியது.

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ள நிலையில், இந்த புதிய அகல ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

இதைத் தொடர்ந்து இன்று காலை மதுரை சந்திப்பில் இருந்து பயணிகளுடன்  மதுரை - தேனி ரயில் தனது முதல் பயணத்தை இனிதே துவக்கியது.

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 75 கிமீ தூரமுள்ள இந்த புதிய அகல ரயில் பாதையில் மூன்று சாலை மேம்பாலங்கள், ஐந்து பெரிய பாலங்கள், 161 சிறிய பாலங்கள், 32 சுரங்கப் பாதைகள், 17 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதைத் திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ரூபாய் 445.46 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக மதுரை - தேனி இடையேயான புதிய அகல ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று தனது முதல் பயணத்தை துவக்கிய மதுரை- தேனி ரயிலில் பயணிகள் மலரும் நினைவுகளுடன் பயணித்தனர். 

மேலும், மதுரை - தேனி ரயில் சேவையின் முதல் பயணத்தில் பங்கேற்ற பயணிகள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். 

12 ஆண்டுகளுக்குப் பிறகு துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இரு மார்க்கத்திலும் ஒருமுறை மட்டுமே சென்று வரும் நிலையில், கூடுதல் சேவைகளை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் 

மேலும், பேருந்தில் மதுரை, தேனி, போடி என செல்லும்போது ஏற்படும் சிரமங்கள் தற்போது களையப்பட்டுள்ளதாகவும் ரயில் கட்டணமும் பேருந்து கட்டணத்தைவிட குறைவு என்பதால் குடும்பத்துடன் சென்று வர ஏதுவாக உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்

மதுரை முதல் தேனி வரை உள்ள வழியோர ஊர்பகுதி மக்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் ஏற்கனேவே நடைமுறையில் இருந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் சேவை தொடர்ந்தால் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com