மாநிலங்களவைத் தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ப.சிதம்பரம் நாளை தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமாா் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேருக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தஞ்சாவூா் சு.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரசுக்கு ஓா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளா் யாா் என்பது அறிவிக்கப்படாத நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.