மதுரை: நியாய விலைக் கடைகளில் கைரேகைப் பதிவுக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நியாய விலைக் கடைகளில் 100 சதவிகிதம் கண் கருவிழி அடையாள முறை மூலமாக பொருள்கள் வாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். மக்களுக்கு அது பயன் அளிக்கும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் பதிவாகுவதில்லை. இதனால் அவர்கள் பொருள்கள் வாங்குவதில் சிரமமாக இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.