தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா் உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 31) பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை ( மே 31) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 1,2,3: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூன் 1, 2, 3 ஆகிய மூன்று நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல், கேரளம் மற்றும் லட்சத்தீவு பகுதி, குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ., முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.