சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளையும் சென்னையில் மழை வெளுத்து வாங்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
மழை நிலவரம் குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது,
இன்று மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதைப் பார்க்கும் போது, சென்னைக்கு ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இன்று வட சென்னையைக் காட்டிலும் தென் சென்னை கூடுதலாக மழை பெறும்.
வட கடலோர மாவட்டங்களிலிருந்து மேகக் கூட்டங்கள் இன்று ஒரு வேளை உள் மாவட்டங்களை நோக்கி நகரக் கூடும். உதாரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகரிக்கும். பாண்டிச்சேரி, கடலூர், ஆகிய பகுதிகளும் இன்றைய மழை விருந்தில் பங்கேற்கலாம். ஒரு வேளை மழை பெய்யாவிட்டால் நாளை நிச்சயம் பெய்யும்.
பெரம்பூரைத் தொடர்ந்து கத்திவாக்கம் பகுதியல் 161 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
நல்ல செய்தி என்னவென்றால் மழை நாளை முதல் இதர மாவட்டங்களுக்கு இடம்பெயர்கிறது. இதனால் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாகக் குறையும். நேற்றும் இன்றும் பெய்யும் மழையைக் காட்டிலும் நாளை மழை குறையும் என்று தெரிவித்துள்ளார்.