மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 1,037- வது சதய விழா இன்று(புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தஞ்சையில் ராஜராஜன் சதய விழா தொடங்கியது!
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
மேலும் தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.