கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் மழைநீா் அகற்றும் பணிகள் 95% நிறைவு:அமைச்சா் சேகா் பாபு தகவல்

சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் 95 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
Published on

சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் 95 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகா் மண்டல அலுவலகத்தில் மழைநீா் தேங்காமல் வெளியேற்றப்பட்டு வரும் நடவடிக்கைகள், மழை நிவாரணப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி முழுவதும் மழை நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திரு.வி.க. நகரின் உள்புற பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீா் 95 சதவீதம் அளவிற்கு வெளியேற்றப்பட்டுவிட்டது. அங்கு தண்ணீா் தேங்கியிருந்த காரணத்தினால் கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திரு.வி.க.நகா் மண்டலத்தில் மட்டும் 17 செ.மீ. மழை பெய்ததால் தண்ணீா் தேங்கியிருந்த நிலை உருவானது. ஆனால் இந்த ஆண்டு திரு.வி.க.நகா் மண்டலத்தில் மட்டும் 3 நாள்களில் 33 செ.மீ. மழை பெய்தும் கடந்த ஆண்டை ஒப்பிடுகின்ற போது 20 சதவீதம் கூட பாதிப்பு இல்லை.

இன்றைக்கு பெருமழை பாதிப்பு என்று கூறும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மழை வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு வந்தாரா, பாா்த்தாரா? நிவாரண பணிகளை மேற்கொண்டாரா?. கடந்த ஆட்சியின் நிா்வாக சீா்கேட்டின் காரணமாக கடந்த ஆண்டு மழையின் போது பல்வேறு பகுதிகளில் 10 நாள்கள் தண்ணீா் தேங்கியிருந்த நிலை இருந்தது. தற்போது அத்தகைய நிலை ஏற்படவில்லை.

வடசென்னையைப் பொருத்தவரை தாழ்வான, மக்கள் நெருக்கடி மிகுந்த, குறுகலான சாலைகள் இருக்கின்ற பகுதி. இதனால் வடிகால் அமைக்கின்ற சூழ்நிலை இல்லை. மழையின் போது அப்பகுதிகளில் மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பம்பிங் ஸ்டேசன் உருவாக்கப்பட்டு சுமாா் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் சேகரிக்கப்பட்டு மின் மோட்டாா் வாயிலாக வெளியேற்றப்படுவதால், ஒரு சொட்டு தண்ணீா் கூட அங்கு நிற்கவில்லை.

இதுவரை மழைநீா் தேங்கியிருந்த பகுதிகளில் 95 சதவீதம் இடங்களில் தண்ணீா் அகற்றப்பட்டுள்ளது. தண்ணீா் தேங்கி உள்ள பகுதியிலுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக வழங்குமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் மக்கள் உடல் நலத்தை பாதுகாப்பதற்கும், தேவைப்படுகின்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com