மேயரின் கைப்பையைச் சுமக்கத் தனி ஊழியர் நியமனமா?

மதுரை மாநகராட்சி மேயரின் ஹேன்ட் பேக்கை தூக்கி சுமக்க தனி ஊழியர் நியமனமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 
மேயரின் கைப்பையை சுமந்து செல்லும் ஊழியர்
மேயரின் கைப்பையை சுமந்து செல்லும் ஊழியர்

மதுரை மாநகராட்சி மேயரின் ஹேன்ட் பேக்கை தூக்கி சுமக்க தனி ஊழியர் நியமனமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன் வசந்த் பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்றத்தில் இருந்து இவரது கணவரின் ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து இருப்பது, கட்சி அலுவலகம் போல செயல்பட்டது, முதன்முறையாக மேயருக்கென தனி ஆலோசகரை நியமித்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.

மேலும் மாமன்றக் கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்களே தங்களது வார்டு பகுதியின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கூறி வெளிநடப்பு செய்தது, வணிகவரித் துறை அமைச்சரின் தொகுதியிலேயே எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை எனக் கூறி மேயருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவேன் என அமைச்சரே கூறும் வகையில் செயல்பட்டது, நகர சபை கூட்டத்தில் மேயரின் வார்டிலயே அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் கூறியது என நாள்தோறும் மதுரை மாநகராட்சி மேயரைச் சுற்றி ஏதேனும் ஒரு  சர்ச்சை எழுந்துகொண்டே இருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கான அதிநவீன குறைதீர் மைய தொடக்கவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்த நிலையில் அவரை வரவேற்பதற்காக மேயர் இந்திராணி நீண்டநேரமாக பூங்கொத்துடன் காத்திருந்தார்.

அப்போது மேயர் இந்திராணியின் ஹேன்ட்பேக்(கைப்பை) கை மாநகராட்சி ஊழியர் ஒருவரிடம் கொடுத்த நிலையில் ஹேன்ட்பேக்கை வைத்துகொண்டே அவரும் நீண்டநேரமாக நின்றுகொண்டே இருந்தார். இதனையடுத்து நிதியமைச்சர் வந்தபோது அவருடன் லிப்டில் மேயரும் சென்ற நிலையில், ஊழியர் ஹேன்ட்பேக்கை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் மூச்சு இளைக்க 3 ஆவது மாடிவரை ஓடிச்சென்றார். பின்னர் அங்கும் கையில் ஹேன்ட் பேக்குடன் ஊழியர் நின்ற அவலமும் அரங்கேறியது.

இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து நிதியமைச்சரை மேயர் வழி அனுப்பியபோது மேயர் தனது ஹேன்ட் பேக்கை ஊழியரிடம் கேட்டபோது மேயர் அறையில் இருக்கிறது என கூறினார். இதனையடுத்து ஹேன்ட்பேக்கை எடுத்துவர மேயர் கூறியதால் அந்த ஊழியர் மூச்சு இளைக்க ஓடிச்சென்று மீண்டும் ஹேன்ட்பேக்கை எடுத்துவந்து மேயரிடம் கொடுத்தார். பின்னர் பேக்கை வாங்கிக் கொண்டு மேயர் புறப்பட்டார்.

மேயரின் இந்த செயல் அங்குள்ள பணியாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மாநகராட்சி மேயரின் ஹேன்ட்பேக்கை தூக்கி சுமப்பதற்கு தனி ஊழியரா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு மேயரின் செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com