கோவை - திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.
கோவை மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்று திருச்சி சாலை. இங்கு எப்போதும் வாகனப் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி சாலை உழவர் சந்தை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. காரில் இருந்த ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியேறிவிட்டார்.
ஒரு கட்டத்தில் மளமளவென பற்றிய தீ காரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. காரின் முன்பக்க கண்ணாடி உள்ளிட்ட சில பொருள்கள் வெடித்துச் சிதறிய சத்தம் அப்பகுதியில் உணரப்பட்டது.
கார் ஒருபுறம் பற்றி எரிந்து கொண்டிருக்க, ஆபத்தை உணராத சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவ்வழியே பக்கவாட்டில் பயணித்துக் கொண்டிருந்தனர். காரின் சில பொருட்கள் வெடித்து உடைந்து சிதறிய சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள் சிலர் அச்சத்தில் உறைந்தனர்.
இதுகுறித்த தகவல் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பீளமேடு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட தீயின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாராபுரம் சொக்கம்புதூர் பகுதியில் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதும், தீ எரியத் தொடங்கியதும் சதீஷ்குமார் காரை விட்டு வெளியேறியதும் விசாரணையில் தெரிய வந்தது.